இது நம்மை பற்றிய தேடல். “மனிதன் இந்த பூமியில் அறிவில் சிறந்தவன்” – நாம் நம்மை பற்றியே பெருமையா சொல்லிக்கிற விஷயம். ஆறாவது அறிவு உள்ள ஒரே இனம்ன்னு நாம நம்பிகிட்டு இருக்கிற இனம் மனித இனம். நம்முடைய வசதிக்கான விஷயங்களை கண்டுபிடிக்க அறிவியல் உபயோகமா இருக்கு, கணிதம் உபயோகமா இருக்கு, சில நேரங்களில் ஆறாம் அறிவு உபயோகமா இருக்கு. ஆனா இது எல்லாத்தையும் விட இந்த உலகம் எவ்வளவு உபயோகமா இருக்குன்னு நாம மறந்துட்டோம்.
மனிதனோட துவக்கம்ன்னு பார்த்தோம்னா டார்வினோட பரிணாம வளர்ச்சி விதியின் படி குரங்கு இனத்துலேர்ந்து வந்ததா சொல்றோம். ஆக, ஒரு குறிப்பிட்ட இனத்துலேர்ந்து பரிணாம வளர்ச்சியின் மூலமா வேறொரு இனமா உருவாகி இருக்கோம். அதிலும் மனிதக் குரங்குகள் இனமான சிம்பன்சி இனத்திற்கும், மனித இனத்திற்குமான சம்பந்தம் அதிகமா இருக்கிறதா அறிவியல் சொல்லுது. முதன் முதலா குரங்கிலிருந்து மனிதன் பரிணாம வளர்ச்சியடைந்த இடமாக கருதப்படுவது இன்றைய ஆப்பிரிக்கா கண்டம்.
பூமியோட ஆரம்ப கட்டத்துல நிலப்பகுதிகள் ஒன்றாக இருந்தது, அதுக்கு அப்புறமா வந்த கால, பருவ நிலை மாற்றத்தால பல பகுதிகளாக நிலம் பிரிந்தது. அது வரைக்கும் கிட்ட தட்ட ஒரே மாதிரி (உருவத்தால், குணத்தால்) இருந்த மனித இனம் கொஞ்சம் கொஞ்சமாக மாற ஆரம்பிச்சுது. அதுனால தான் ஆப்பிரிகாவை சேர்ந்தவர்கள் கருமையான நிறத்திலும், ஐரோப்பா, வட அமெரிக்காவைச் சேர்ந்தவர்கள் வெண்ணிறத்திலும், தென் அமெரிக்கா, மத்திய ஆசியாவைச் சேர்ந்தவர்கள் மாநிறத்திலும், கிழக்காசியா, தென்கிழக்காசியவைச் சேர்ந்தவர்கள் லேசான மஞ்சள் நிறத்திலும் வெவ்வேறு அளவிலான உடலமைப்போட இருக்காங்க. இதுல முக்கியமான விஷயம் என்னன்னு பாத்தோம்னா.. இதே போல மிருகங்களும் நிலப்பரப்பு பிரிஞ்ச போது தனித்தனியா பிரிஞ்சுது. ஆனா ஒரு சில மிருகங்கள் தான் கொஞ்சம் (மனித இனத்தை ஒப்பிட்டு பார்க்கும் போது) மாறிச்சு. எடுத்துக்காட்டு யானைகள்(ஆசியா, ஆப்பிரிக்கா), புலிகள் (ஆசியா, சைபீரியா), கரடிகள்(நிலப்பகுதி, துருவப்பகுதி). இந்த மாற்றமும் பெரும்பாலும் உடல் அளவுல தான் நடந்திருக்கே தவிர, குணத்துல இல்லை.
நாளாக நாளாக மனிதனோட வளர்ச்சி அதிகமா இருந்துச்சு. இதுக்கான முக்கியமான காரணம் இயற்கையின் மீதான பயம். கற்கால மனுஷன் தீயை கண்டுபிடிச்சான் (அதுவும் தற்செயல நடந்திருக்கும்ன்னு விஞ்ஞானிகள் சொல்றாங்க). தீயோட முக்கியமான உபயோகமா இருந்தது இரவுல வெளிசத்தை தரவும், இரவு நேரத்துல தாக்க வர மிருகங்களை விரட்டவும் தான். போக போக தான் சமைக்க கத்துகிட்டோம். அதுக்கு அப்புறம் மழைக்காக ஒதுங்க குகை, அப்புறம் மர வீடுன்னு தங்க இடம் பார்த்தான்.(இன்னைக்கோ நிலாவுல அடுக்குமாடி வீடு கட்டலாம்னு யோசனை) அப்புறமா எந்த மிருகம் சாதுவா, மனுஷனுக்கு அடங்கி போகுதோ அது எல்லாத்தையும் தன்னோட வசதிக்காக அடிமையாக்க ஆரம்பிச்சான்.(இன்னைக்கு அடங்கி போற நாட்டையே ஆள தொடங்கியாச்சு) அப்புறமா சக்கரம் வ்ந்துது.. கூடவே வண்டி வந்துது. ஆத்தாங்கரையில விவசாயம் வளர்ந்தது.. புதுப்புது கலாச்சாரங்கள் வளர ஆரம்பிச்சுது. மனுஷனோட கண்ணோட்டமும் மாற ஆரம்ப்பிச்சுது.
கலாச்சாரங்கள் வளர வளர அதிகமானது என்ன தெரியுமா.. ஆயுதங்கள். கற்காலத்துல வெறும் கல்லெடுத்து மிருகத்தை விரட்டின மனுஷன், கலாச்சாரங்கள் ஆரம்பிச்ச உடனே தன்னோட பகுதியை காப்பத்தவும், அடுத்தவனோட பகுதியை அபகரிக்கவும் வேல், வாள்ன்னு தொடங்கி இன்னைக்கு அனுகுண்டு, கிருமி யுத்தம்ன்னு போய்கிட்டு இருக்கான். ஆனா நம்ம கூட பிரிஞ்ச மிருகங்களை பாருங்க காலம் எவ்வளவு மாறினாலும் அதுங்க மாறாம தான் இருக்கு. ஒரு சில மிருகங்கள் சுத்தமா அழிஞ்சு கூட போயிருக்கு. ஆனாலும் அது அழியுற வரைக்கும் கூட அதோட சொந்தமான குணத்தோட தான் இருந்திருக்கு.
ஏன் சிவா நமக்கிருக்கிற அறிவை வச்சிகிட்டு நல்லது எதுவுமே பண்ணலையான்னு நீங்க கேட்கலாம். நான் இல்லைன்னு மறுக்கவே மாட்டேன். இன்னைக்கு நான் எழுதுற இந்த எழுத்தை உங்க இடத்திலேர்ந்தே நீங்க பாக்குறீங்கனா அதுக்கு காரணமும் நம்மோட அறிவு தான். பலவிதமான ஆட்கொல்லி நோய்கள் இன்னைக்கு இல்லாம பண்ணி இருக்கோம்னா அதுக்கு காரணமும் இதே அறிவுதான். ஆனாலும் சிந்திச்சு பாருங்க இந்த அறிவு எவ்வளவு பேரை காப்பாதியிருக்கு, எவ்வளவு பேரை அழிச்சிருக்கு. இந்த அழிவுகள் மட்டும் இல்லைனா இன்னைக்கு நான் இப்படி பேசுவேனா? அந்த காலத்துல ஏற்பட்ட சிலுவை யுத்தங்களேர்ந்து ஆரம்பிச்சு, முதலாம் உலகப் போர், இரண்டாம் உலகப்போர், இராக் யுத்தம், ஆப்கான் யுத்தம், ஈழத்து போர்ன்னு நிறுத்தாம அழிவுகள் நடந்துகிட்டே தான் இருக்கு.
ஒரு புறம் யுத்தம் மக்களை கொல்லுதுன்னா. இன்னொரு புறம் மாசு, தூசு, புகைன்னு இயற்கையோடவும் நாம விளையாட அரம்பிச்சுட்டோம். நாம இயற்கைக்கு தர அழிவு பத்தி யாரும் அதிகமா பேசுறதில்லை. ஆனா இயற்கை ஒரு சின்ன அழிவைத்தந்தாலும் நாம கடவுளை குத்தம் சொல்ற அளவுக்கு கூட போவோம். இது தான் நம்ம அறிவு நமக்கு கொடுத்திருக்கிற மனப்பான்மை. இன்னும் சொல்லப்போனா நாம இயற்கைக்கு தர அழிவுகளோட விளைவைத் தான் நாம அனுபவிக்கிறோம். பூகம்பம், சுனாமி இது எல்லாமே நம்ம பூமியில நடந்துகிட்டு இருக்கிற இயற்கையான நிகழ்வுகள்.. காலம் காலமா இது நிகழ்துகிட்டே தான் இருக்கும். ஏன்னா பூமியோட குணம் மாறாது. நினைச்ச உடனே மாற அது என்ன மனுஷனோட மனமா.
பரிணாம வளர்ச்சியில பார்த்தோம்னா.. ஒரு இனம் இன்னொரு மேன்பட்ட இனமா மாறும். வெறும் உடல் நிலை மாற்றம் மட்டுமில்லை பரிணாம வளர்ச்சி, ஒரு உயிரினத்தோட அறிவு சார்ந்த செயல்கள், குணங்கள்ன்னு உள்ளடக்கினது தான் பரிணாம வளர்ச்சி. ஒரு செல் உயிரியில இருந்து இன்னைக்கு மனுஷன் வரைக்கும் அப்படித்தான் வளர்ந்திருக்கோம். பரிணாம வளர்ச்சி இத்தோட நின்னுறாதுங்கிறது மட்டும் நிச்சயம். ஆனா நாம இப்ப இருக்கிற நிலைலேர்ந்து இதை விட மேம்பட்ட இனமா மாறுவோமா? இது தான் கவலைக்குரிய கேள்வி. நாம அப்படி மாறினாத்தான் நமக்கு ஆறறிவு இருக்கிறதுல பெருமை.
பரிணாம வளர்ச்சி எல்லாம் வரதுக்கு ரொம்ப நாள் ஆகும் சிவா, அப்போ நாம இருப்போமோ மாட்டோமோ!! ஏன் இப்பவே கவலை படனும்ன்னு நினைக்காதீங்க. பரிணாமம்ன்னு சொன்னாலே கொஞ்ச கொஞ்சமா தான் நடக்கும். ஒரே நாள்ல குரங்குலேர்ந்து மனுஷனா நாம மாறலை. இப்பவும் நாம இன்னொரு இனமா தான் மாறிகிட்டு இருக்கோம். இது தான் உண்மை. ஒருவேளை அது என்ன இனம்ன்னு நமக்கு தெரியாம இருக்கலாம். ஆனா நம்மோட சந்ததியினர் அந்த இனமாத்தான் மாற போறாங்க. எப்படி நம்ம சொத்தை பத்திரமா பாதுகாத்து நம்ம வாரிசுங்க கையில கொடுப்போமோ, அதே மாதிரி இந்த உலகத்தையும் பத்திரமா நம்ம வாரிசுங்க கிட்ட கொடுக்க வேண்டிய கடமை நம்ம கிட்ட இருக்கு.
நாம வாழுற பூமியோட இறுதி வரைக்கும் நம்ம இனம் கண்டிப்பா இருக்கனும். இப்படியே பூமியோட சூழலை அரிச்சிகிட்டே இருந்தோம்னா பூமி அழியுறதுக்கு முன்னாடியே மனித இனம் இல்லாம போயிடும். இந்த உலகம் நம்மோட சொத்து. இந்த உலகத்துல வாழுற, இருக்கிற எல்லா உயிரினத்துக்கும் இந்த பூமி சொந்தம். அதை என்னைக்கு மனுஷ இனம் முழுசா புரிஞ்சு நடக்குதோ அன்னைக்குதான் நாமா மனுஷன விட மேம்பட்ட இனமா மாறி இருக்கோம்னு சொல்ல முடியும்.
தேடல் தொடரும்